- 28 May, 2026
மே 26, 2026: வடகிழக்கு இந்தியாவில் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாகப் பணியாற்றிய இத்தாலிய மறைபரப்பாளர், சலேசிய சபையின் அருள்பணி கொஸ்தான்டினோ வெண்ட்ராமே அவர்கள் (Costantino Vendrame), கத்தோலிக்க திருஅவையால் வணக்கத்திற்குரியவர் (Venerable) என அறிவிக்கப்பட்டுள்ளார்.
மே 22 அன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கான நான்கு கட்ட செயல்முறைகளில் இரண்டாவது கட்டமான, அருள்பணியாளர் வெண்ட்ராமேயின் வீரமிக்க நற்பண்புகளை அங்கீகரிக்கும் ஆணையைப் பிறப்பிக்க புனிதர் பட்டம் தொடர்பான பேராயத்திற்கு (Dicastery for the Causes of Saints) அனுமதி அளித்தார்.
புனிதர் பட்ட செய்முறைகளுக்கான சலேசிய சபையின் பொது கோரிக்கையாளரான அருள்பணியாளர் பியர்லூயிகி கேமரோனி, அருள்பணியாளர் வெண்ட்ராமேயை மக்களிடையே நம்பிக்கையைப் பரப்பிய ஒரு மறைபரப்பாளர் என்று விவரித்தார்.
உரோமில் வெளியிடப்படும் சலேசிய செய்திச் சேவையான ஏஎன்எஸ்-இன் (ANS) கூற்றுப்படி, "தனிப்பட்ட தொடர்பின் மூலம், அவர் இறைவனின் இரக்கமுள்ள இதயத்தின் அன்பை வெளிப்படுத்தினார். 'கிறிஸ்துவின் இதயம்... முதல் அறிவிப்பின் உயிர்நாடி' என்பதில் அவர் உறுதியாக இருந்தார்," என்று அருள்பணியாளர் கேமரோனி கூறினார்.
1893 ஆம் ஆண்டு இத்தாலியின் ட்ரெவிசோ மாகாணத்தில் உள்ள சான் மார்டினோ டி கோல் உம்பெர்ட்டோவில் பிறந்த அருள்பணியாளர் வெண்ட்ராமே, மறைபரப்பாளராக வேண்டும் என்ற விருப்பத்துடன் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சலேசிய சபையில் சேருவதற்கு முன்பு, செனெடா மறைமாவட்டத்தின் குருத்துவ மாணவராகச் சேர்ந்தார்.
அவர் 1914 இல் தனது முதல் உறுதிமொழியையும், 1920 இல் நிலையான உறுதிமொழியையும் மேற்கொண்டார். முதலாம் உலகப் போரின்போது, அவர் ஒரு வீரராகப் பணியாற்றினார்.
அருள்பணியாளர் வெண்ட்ராமே மார்ச் 15, 1924 அன்று மிலானில் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அதே ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி, இந்தியாவுக்குப் புறப்படுவதற்கு முன்பு, துரினில் உள்ள அன்னை மரியாளின் பசிலிக்காவில் அவர் மறைபரப்பாளர் சிலுவையைப் பெற்றார்.
அவர் டிசம்பர் 24, 1924 அன்று ஷில்லாங்கை வந்தடைந்தார், பின்னர் அசாம், மேகாலயா மற்றும் தமிழ்நாட்டில் பணியாற்றினார்.
வடகிழக்கு இந்தியாவின் தொலைதூர கிராமங்களுக்கு நடந்தே சென்றதற்காக அறியப்பட்ட அருள்பணியாளர் வெண்ட்ராமே, தனது பணியை ஏழைகளுக்காகவும், நற்செய்தியைப் அறிவிப்பதற்காகவும் அர்ப்பணித்தார். அறிக்கைகளின்படி, அவர் கிறிஸ்தவர்களால் மட்டுமல்லாமல், பிற மதத்தவர்களாலும் மதிக்கப்பட்டார், அவர்கள் அவரை ஒரு உண்மையான இறைமனிதனாகக் கருதினர்.
இரண்டாம் உலகப் போரின்போது, அவர் இத்தாலியர் என்பதால் பிரிட்டிஷ் காலனித்துவ அதிகாரிகள் அவரைச் சிறையில் அடைத்தனர். அவர் முதலில் குர்காக்களால் பிடித்து வைக்கப்பட்டார், பின்னர் ராஜஸ்தானின் தியோலி மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூனில் சிறையில் வைக்கப்பட்டார்.
தீவிரமான மூட்டு வலியால் அவதிப்பட்ட போதிலும், அவர் தனது மறைபரப்பாளர் பணியைத் தொடர்ந்தார். அவர் பின்னர் அசாமின் திப்ருகரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவர் புனித யோவான் போஸ்கோவின் பெருவிழாவிற்கு முந்தைய நாள், ஜனவரி 30, 1957 அன்று தனது 63 வது வயதில் காலமானார்.
By Catholic Connect Reporter
© 2026 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP