- 08 May, 2026
மதுரை, மே 3, 2026: "ஒரு கட்டடம் என்பது வெறும் செங்கற்களால் எழுப்பப்பட்ட சுவர் அல்ல; அது உணர்வுகளுக்கு உருக்கொடுக்கும் தளம்." அந்த வகையில், திருச்சி புனித அன்னாள் சபையின் நீண்ட கால கனவாகவும், வருங்கால தலைமுறையினரின் அறிவுச் சுனையாகவும் உருவெடுத்துள்ள புனித அன்னாள் ஜெ.செ. பள்ளியின் புதிய கட்டிடத் திறப்பு விழா கடந்த ஏப்ரல் 27 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.
மதுரை உயர்மறைமாவட்ட முதன்மை குரு பேரருள்தந்தை ஜெரோம் எரோணிமுஸ் அவர்களின் தலைமையில், சபை தலைமை சகோதரி அருள்சகோ.மரிய சகாய தமிழரசி, மரியா மாநில தலைமை சகோதரி அருள்சகோ. ஜோஸ்பின் மேரி கிளீட்டஸ், அருள்தந்தையர்கள் மற்றும் சபை ஆலோசகர்கள் முன்னிலையில் இவ்விழா தொடங்கியது.
இந்த அழகிய பள்ளிக் கட்டிடம், திருச்சி புனித அன்னாள் சபை அருள்சகோதரிகளின் அயராத உழைப்பு, செபம் மற்றும் தியாகத்தால் செதுக்கப்பட்ட ஒரு காவியமாகும்.
சிறப்பு நிகழ்வுகள்:
திறப்பு விழா: சபை தலைமை சகோதரி அருள்சகோ. மரிய சகாய தமிழரசி அவர்கள் புதிய பள்ளிக் கட்டிடத்தை ரிப்பன் வெட்டி முறைப்படி திறந்து வைத்தார்.
கல்வெட்டு திறப்பு: புதிய கட்டிடத்தின் நோக்கத்தையும் வரலாற்றையும் பறைசாற்றும் கல்வெட்டினை மரியா மாநில தலைமை சகோதரி அருள்சகோ. ஜோஸ்பின் மேரி கிளீட்டஸ் அவர்கள் திறந்து வைத்து சிறப்பித்தார்.
மங்கள ஒளி: மாணவர்களின் அறிவுக்கண்களைத் திறக்கும் அடையாளமாக, சபை தலைமை சகோதரி மற்றும் நிலக்கொடையாளர் திருமிகு. ஜெயராஜ் செல்லத்துரை அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இணைந்து குத்துவிளக்கேற்றினர்.
மதுரை உயர்மறைமாவட்ட முதன்மை குரு பேரருட்தந்தை ஜெரோம் எரோணிமுஸ் அவர்கள் புதிய கட்டிடத்தை ஆசீர்வதித்து, பள்ளியின் வளர்ச்சிக்காகச் சிறப்புச் செபங்களை ஏறெடுத்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நன்றிக் கடன் திருப்பலியில், இக்கல்வி ஆலயம் அறநெறி வளர்க்கும் இடமாகவும், மனிதநேயத்தை விதைக்கும் புனித நிலமாகவும் திகழ அனைவரும் இணைந்து வேண்டினர்.
கட்டிடப் பணியில் பங்களித்த அனைத்து நல்உள்ளங்களும் விழாவில் கௌரவிக்கப்பட்டனர். இந்த மாபெரும் முயற்சிக்கு முழுமையான நிதி உதவியும், வழிகாட்டுதலும் வழங்கிய சபை தலைமை மற்றும் மாநில தலைமை சகோதரிகளுக்கு நிர்வாகம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
விழாவின் நிறைவாக, வருகை தந்திருந்த அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து அறுசுவை விருந்தில் பங்கேற்று மகிழ்ந்தனர்.
"அறிவு மலரும் ஆலயமாக, அறநெறி வளர்க்கும் பள்ளியாக இப்புதிய கட்டிடம் மிளிரட்டும்!"
By Catholic Connect Reporter
© 2026 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP