- 22 April, 2026
வேலூர், ஏப்ரல் 22, 2026: வேலூர் மறைமாவட்டம் தனது அருள்பணியாளர்களுக்கு இரண்டு நாள் தொடர்ச்சியான உருவாக்கப் பயிற்சியை 2026 ஏப்ரல் 20 முதல் 21 வரை ஆலமேலரங்காபுரத்தில் உள்ள சிநேகா தீபத்தில் வெற்றிகரமாக நடத்தியது.
இந்த நிகழ்ச்சி, அருள்பணியாளர்களின் முழுமையான நலனையும் (holistic well-being) மற்றும் அவர்களின் மறைபணித் திறனையும் வலுப்படுத்தும் முயற்சியாக அமைந்தது.
“மன-ஆன்மீக ஒருமைப்பாடு: சோர்விலிருந்து மகிழ்வூட்டும் வாழ்விற்கு” (Psycho-Spiritual Integration: From Burnout to Cherishing) என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தப் பயிற்சி, ஏப்ரல் 20 அன்று தொடக்கவிழாவுடன் ஆரம்பமானது. இதில் வேலூர் மறைமாவட்ட ஆயர் அம்புரோஸ் அவர்கள் மற்றும் முதன்மை குரு ஜான் நிக்கோலஸ் அவர்கள் தலைமையேற்றனர்.
அவர்களுடன் மறைமாவட்ட பொருளாளர் அருள்பணி ரிச்சர்ட், மேய்ப்பு பணி நிலைய இயக்குனர் அருள்பணி இருதயராஜ், மறைமாவட்ட திருச்சபை நீதிமன்ற நீதிபதி அருட்தந்தை ஜெகதீஸ், மைய இயக்குனர் அருட்தந்தை லூவா தாமஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தொடக்க உரையில் ஆயர் அம்புரோஸ் அவர்கள், இன்றைய அதிகரித்து வரும் மறைப்பணிச் சுமைகளின் மத்தியில் அருள்பணியாளர்கள் தங்களது மனநலமும் ஆன்மீக நலனையும் பாதுகாப்பது மிகவும் அவசியம் என வலியுறுத்தினார். “Burnout” (சோர்வு நிலை) என்பது பலவீனம் அல்ல; அது புதுப்பிப்புக்கான ஒரு அழைப்பு எனக் குறிப்பிட்டு, கிறிஸ்துவில் வேரூன்றி வாழ அழைத்தார். மேலும், உள்ளார்ந்த சமநிலை, செபமயமான வாழ்க்கை மற்றும் உணர்ச்சி முதிர்ச்சி ஆகியவற்றிலிருந்து பயனுள்ள குருத்துவ சேவை உருவாகிறது என வலியுறுத்தி, இந்தப் பயிற்சியை தனிப்பட்ட மாற்றத்திற்கான அருள்நிறைந்த வாய்ப்பாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
இந்தப் பயிற்சியை அருட்பணி முனைவர் சகாயராஜ் OFM Cap. அவர்கள் சிறப்பாக வழிநடத்தினார். அவர் வழங்கிய அமர்வுகள் மூலம் குருக்கள் தங்களின் உள்ளார்ந்த குணமடைதல், மனஅறிவு வளர்ச்சி மற்றும் ஆன்மீக புதுப்பிப்பு ஆகியவற்றில் ஆழமான அனுபவம் பெற்றனர். சோர்வு அறிகுறிகளை அடையாளம் காணவும், உணர்ச்சிகளை விழிப்புணர்வுடன் அணுகவும், மனநலத்தையும் ஆன்மீக வாழ்வையும் ஒருங்கிணைக்கவும் அவருடைய வழிகாட்டுதல் பெரிதும் உதவியது.
பல அருள்பணியாளர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு சிந்தனை அமர்வுகள், குழு விவாதங்கள் மற்றும் தனிப்பட்ட பகிர்வுகளில் ஈடுபட்டனர். ஸ்நேகா தீபத்தின் அமைதியான சூழல், ஜெபம், சகோதரத்துவம் மற்றும் உள்ளாய்வு (introspection) ஆகியவற்றிற்கு ஏற்ற சூழலை வழங்கியது. இதனால் அருள்பணியாளர்கள் தங்களது வழக்கமான பணிகளிலிருந்து விலகி, புதுப்பிப்பில் கவனம் செலுத்தும் வாய்ப்பைப் பெற்றனர்.
இந்த நிகழ்ச்சி ஏப்ரல் 21 அன்று திருப்பலியுடன் நிறைவடைந்தது. திருப்பலி போதனையில் அருட்தந்தை சகாயராஜ் அவர்கள், கிறிஸ்துவில் வேரூன்றி உள்ளார்ந்த சமநிலையுடன் புதிய உற்சாகமும் இரக்கமும் கொண்டு மறைப்பணியை மேற்கொள்ளுமாறு குருக்களை ஊக்குவித்தார். இந்நிகழ்ச்சி இன்றைய அருள்பணியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு நேர்மையான பதிலாக அமைந்துள்ளதாகவும் பாராட்டினார்.
நிகழ்ச்சியெங்கும் மறைமாவட்ட தலைமைத்துவத்தின் தொடர்ந்து இருந்த ஆதரவும் பங்கேற்பும், அருள்பணியாளர்களின் தொடர்ச்சியான உருவாக்கத்திற்கும் நலனிற்கும் அளிக்கப்படும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியது.
வேலூர் மறைமாவட்டத்தின் இந்த முயற்சி, ஆழமான ஆன்மீக வாழ்வு, உணர்ச்சி நிலைத்தன்மை மற்றும் புதுப்பிக்கப்பட்ட பணிச் சிந்தனை ஆகியவற்றிலிருந்து பயனுள்ள மறைப்பணி உருவாகிறது என்ற நம்பிக்கையை வலியுறுத்துகிறது. இந்தப் பயிற்சி, அருள்பணியாளர்களின் தனிப்பட்ட மற்றும் பணிவாழ்வை வலுப்படுத்தி, இறைமக்களுக்கு மேலும் அர்ப்பணிப்புடனும் இரக்கத்துடனும் சேவை செய்யத் தயாராக்கும் முக்கியமான படியாக அமைகிறது.
செய்தியாளர்: அருள்பணி தானியல் சர்மா
விண்ணரசி தகவல் தொடர்பு மையம்
வேலூர் மறைமாவட்டம்
© 2026 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP